இலங்கையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும்: மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தல்

இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி The Island  பத்திரிகை இது தொட்பாக   செய்தி வௌியிட்டுள்ளது.

மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள்  உள்ளிட்ட  அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1987 ஜூலை முதல் 1990  மார்ச் வரையான காலப்பகுதியில்  இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால்,   இந்தியாவின் பொறுப்புக்கூறல் எவ்வாறு அமையும் என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே  மீனாக்ஷி கங்குலி இந்த கருத்துகளை வௌியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, UN Advocacy, FORUM-ASIA, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) சார்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.