சென்னையில் இருந்து முதலாவது விமானம் பலாலியில் தரையிறங்கியது

சென்னைக்கும் யாழுக்கும் இடையிலான விமான சேவை இன்று (12) ஆரம்பமாகிய நிலையில், முதலாவது விமானம்  பலாலி விமானநிலையத்தில் தரையிறங்கியது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்காக விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிய நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் பலாலியில் தரையிறங்கியது.

அதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் இன்று திங்கட்கிழமை  முதல் சென்னைக்கு பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாரமொன்றுக்கு இந்த விமான சேலை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.