The Family Man 2 : அமசோன் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

The Family Man 2 இணைய தொடரை நிறுத்தாவிட்டால், அமசோன் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் 3ஆம் தேதி அமசோன் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த இணைய தொடரில் பொலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தொடரில் இலங்கை தமிழ் போராளிக் குழுக்களை தவறாக  சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும்,  தமிழ் சினிமா பிரபலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும் என பல பிரபலங்கள் சமூகவலைத் தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

 இந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா தி ஃபமிலிமான் – 2   தொடர்பாக அமசோன் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

” எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பமிலி மான் 2′ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும், தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலைப் போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும், வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பமிலி மான் 2 தொடரை ஒளிபரப்பும் அமசோன் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமசோன் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.