வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
புத்தசாசன அமைச்சர் வெடுக்குநாறி மலை பௌத்தத்திற்குரியது எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க முடியாது.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களை கடந்த அரசாங்கங்களைப் போன்று ஜேவிபி அரசாங்கமும் கைது செய்ய முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.
வெடுக்குநாறி மலை ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்துக்குள் தான் 24 மில்லியன் ரூபாய் செலவில் ஜேவிபியால் கொண்டுவரப்படுகின்ற கிவுல் ஓயா திட்டம் செயற்படுத்தப்பட இருக்கின்றது.
மிகப் பெரிய காடுகளை அழித்து இந்த கிவுல் ஓயாத் திட்டம் கொண்டுவரப்பட இருக்கின்றது. அதற்கு எதிரான விமர்சனங்கள், போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வெடுக்குநாறி மலை தொடர்பில் புத்ததாசன அமைச்சர் தெரிவித்த கருத்தும் வவுனியா வடக்கை முழுமையாக ஆக்கிரமித்து சிங்கள பௌத்தமயமாக்கலை தான் ஜேவிபியும் கொண்டு செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
அந்த வகையில் பௌத்தமயமாக்கலை மேற்கொள்கின்ற மற்றும் மலைகள், தொல்லியல் சின்னங்கள் இருக்கின்ற இடங்களையும் பௌத்தமயமாக்குகின்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இங்கு சைவ வழிபாடு நீண்டகாலம் இடம்பெற்று வந்திருக்கின்றது. 2024ஆம் ஆண்டு சிவராத்திரி வழிபாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். நாங்கள் சிறை வரை சென்று வந்துள்ளோம்.
எந்த துன்பங்கள் வந்தாலும் எங்களது ஆலயத்தையும் வரலாற்றையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அது தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலம். 1990 காலப்பகுதியில் இந்த ஆலயத்தில் வழிபட்டமைக்கான ஆதாரங்கள் கூட உள்ளன.
பல ஆதாரங்கள் மற்றும் முன்னர் வாழ்ந்தவர்களது வரலாற்று கருத்துக்கள் இருக்கின்றது. இது முற்று முழுதாக தமிழர்களது பூர்வீக இடம். அங்கு சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் ஜேவிபி எடுத்து வரும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவர்களது செயற்பாடு இவ்வாறு தொடருமானால், மக்களை திரட்டி பெரியளவிலான போராட்டங்களை எல்லா இடங்களிலும் நடத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.
வெகுவிரைவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை பாதுகாப்பதற்காகவும் புத்தசாசன அமைச்சரின் கருத்துக்கு எதிராகவும் மக்களை திரட்டி போராட தயாராகி வருகின்றோம். அதற்கான அழைப்பையும் விடுக்கின்றோம்.
அனைத்து தரப்புகளும் எமது வழிபாடுகளை பாதுகாக்கின்ற அத்தனை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்தப் போராட்டத்தை பெரியளவில் செய்து எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.



