வன்னேரிக்குளம் மைதானத்திலிருந்து வெளியேறியது இராணுவம்

கிளிநொச்சி – வன்னேரிக்குளம் வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் இருந்து வன்னொளி விளையாட்டுக் கழக மைதானத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக விளையாட்டுக் கழகத்தினால் முழுமையாக மைதானத்தை பயன்படுத்துவதிலும் பொது நிகழ்வுகளை நடாத்துவதிலும் நெருக்கடிகள் காணப்பட்டன.

கிராம, பிரதேச, மாவட்ட மட்டங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகளும் மனுக்களும் கையளிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் தற்போது வன்னொளி விளையாட்டு மைதானத்திலிருந்து முழுமையாக வெளியேறி உள்ளனர்.

வன்னேரிக்குளத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வன்னேரிக்குளம் விளையாட்டு மைதானத்திலும் ஆனைவிழுந்தான் கிராமத்தின் இராணுவ முகாமுக்காக பெருமளவு நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது மக்களின் இயல்பு வாழ்வை பாதித்துள்ளதாக உரையாற்றி இருந்த நிலையில் 14 வருடங்களின் பின் இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.