வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தினை பாதுகாத்த கொள்ள முடியும்-கஜேந்திரன்

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தினை பாதுகாத்த கொள்ள முடியும் எனவே இந்த ஆபத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த ஆபத்தை விளங்கி கொண்டு இதற்கு முண்டுகொடுக்கின்ற தரப்பினரை தமிழ் மக்கள் இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  வேட்பாளர்களை ஆதரித்து  இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர் தெரிவித்ததாவதுஎமது தேசத்தை அங்கீகரிக்க இராஜதந்திர நகர்வை எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கொண்டுள்ளார்.

எனவே அம்பாறை மக்கள் ஆதரவினை வழங்க முன்வர வேண்டும்.வடக்கு கிழக்கு என்ற தாயக கோட்பாட்டுடன் உள்ள எமது தலைவரின் கரங்களை கிழக்கு மாகாணம்  எதிர்காலத்தில் ஏனைய சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்படாது இருக்க ஆதரவினை வழங்க வேண்டும்.இது தவிர இந்த வடகிழக்கு கோரிக்கையை ஏற்க மறுக்கின்ற கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மூன்றில் ஒரு பங்கு தான் உள்ளனர்.இங்கு எமது மக்களின் நிலங்கள் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் பறிக்கப்படுகின்றது.இதில் முஸ்லீம் மக்களை குற்றஞ்சாட்டவில்லை.

இந்த அடிப்படை வாதிகள் நிலங்களை பறிப்பதுடன் நின்று விடாது சிங்களவர்களுடன் இணைந்து எமது மக்களின் உரிமைகளை பறிப்பதற்கும் துணை நிற்கின்றனர்.இதனால் பிரிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் தமிழர்களால் ஒன்றும் செய்ய முடியாது.இணைந்த வட கிழக்கு  மாகாணத்தில் தான் எம்மால் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தினை பாதுகாத்த கொள்ள முடியும்.எனவே இந்த ஆபத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த ஆபத்தை விளங்கி கொண்டு இதற்கு முண்டுகொடுக்கின்ற தரப்பினரை தமிழ் மக்கள் இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.தற்போது கல்முனை பிரதேச செயலக கோசத்துடன் அம்பாறையில் களமிறங்கியுள்ள கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ஸவின் ஒரு முகவர் .

இந்த கோட்டபாய ராஜபக்ஸவுடன் ஒன்றிணைந்து முஸ்லீம் மக்களும் உள்ளனர்.முஸ்லீம் தலைவர்களும் அவரது செல்லப்பிள்ளைகளாகவே உள்ளனர்.இந்நிலையில் கருணாவினால் கோட்டபாயவிற்கு முன்னால் நின்று ஒரு வார்த்தை பேசவே முடியாது. கிழக்கு மாகாணத்தில் இந்த கருணா அம்மான் கோட்டபாயவிற்கு இடமுள்ளது என காட்டுவதற்காக வாக்குகளை பிரிக்கவே இங்கு வந்துள்ளார்.எனவே இந்த சதிகளுக்குள் எமது மக்கள் எடுபட்டு விடக்கூடாது என கூறினார்.