109 Views
கடந்த 2018ம் ஆண்டு முதல் நாடுகடத்தல், தடுப்புக் காவல், கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம், சமூகத் தடுப்பு எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் மீண்டும் அவர்கள் முன்பு வாழ்ந்த அவுஸ்ரேலியாவின் பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலோலா சமூக மக்களின் தொடர் போராட்டத்தின் மூலமாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. ஆனால், எல்லா அகதிகளுக்கும் அப்படியான ஆதரவு கிடைத்துவிடுவதில்லை.
அவுஸ்ரேலியாவில் இன்னும் நிச்சயத்தன்மையற்ற இணைப்பு விசாக்களில் பல ஆயிரம் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பேரணி செல்ல எந்த ஊர் மக்களும் இல்லை, எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு குரல் கொடுப்பதற்கில்லை, அவர்களது பிரச்சினைகளை சொல்லும் எந்த பொது பிரச்சார செயல்பாடுகளும் இல்லை.
எந்த காரணமுமின்றி இந்த தமிழ் அகதி குடும்பத்தின் நான்கு ஆண்டுகளை சித்ரவதைக்கு உள்ளாக்கிய அவுஸ்ரேலியாவின் குடியேற்ற அமைப்புமுறையில் கட்டமைப்பு ரீதியான பிரச்சினை உள்ளது. இதுவே இவர்களை போன்ற அகதிகளை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.