தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ரணிலுடன் பேச்சு- பாராளுமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிப்பு

குருந்தூர் மலை பிரச்சினை உட்பட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி முன்வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பிரச்சினைகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை என தெரிவித்த அமைச்சர் தனிப்பட்ட விதத்திலும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் எந்த விதத்திலும் எவரும் இனவாதமாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுபவர் என தெரிவித்த அமைச்சர், நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுவே அவசியமாக உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.