இலங்கை அரசைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீன் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை  வெளிநாட்டு மீன்பிடிதடை சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்கி யாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை,காரை நகர்,கிளாஞ்சி, மயிலட்டி, மற்றும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் படகுகளை ஏலம் விட கடந்த 2020ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்ட்டுள்ள நல்ல நிலையில் உள்ள படகுகளை மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கும்மாறு கேட்டு கொண்டதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தமிழக மீனவர்களால் இலங்கை சென்று படகுகளை மீட்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இலங்கை அரசு  கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை ஏலம் விடப்போவதாக  அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு நேற்று காலை முதல் மீனவர்களின் நூற்றுக்கணக்hன படகுகளை ஏலத்தில் விட்டு வருகின்றது.

இதனை கண்டித்து இன்று இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிட தவறும் பட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மீனவர்க்ள தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளையும், இலங்கை அரசையும் கண்டித்து கேஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் நேற்று (07) ஏலத்தில் விடப்பட்டதில் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News