இந்தியாவிற்கான விசா விண்ணப்ப நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பாதுகாப்பு சம்பவம் ஒன்றை தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இந்தியாவிற்கான  விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நிலையம் (ஐவிஎஸ் கொழும்பு)  காலவரையறையின்றி  மூடப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, விசா விண்ணப்பங்கள் தொடர்பில் திகதிகளை பெற்றிருந்த விண்ணப்பதாரிகள் மீண்டும் புதிய திகதிகளை பெற்றுக்கொள்வதற்காக ஐவிஎஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளவேண்டும்.

அவசர விசா அல்லது தூதரக தேவைகள் உடையவர்கள் தொலைபேசி மூலம் இந்திய தூதரகத்தை  தொடர்புகொள்ள முடியும்.

இதேவேளை, கொழும்பில் அமைந்துள்ள இந்திய வீசா நிறுவனத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலையத்தில் காணப்பட்ட மடிக்கணனி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் 3 திருடப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி  காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது அங்கு யாரும் காணப்படவில்லை என்றும் , சி.சி.டி.வி. காணொளிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பம்பலப்பிட்டி  காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பணம் உள்ளிட்டவை களவாடப்படவில்லை. சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பம்பலப்பிட்டி  காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.