மட்டக்களப்பு- சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்திற்கு நீதி வேண்டி போராட்டம்

குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்ய வேண்டும்

இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்திற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது படுகொலை தொடர்பில்  காவல்துறையினர் சரியான விசாரணைகளை முன்னெடுக்காத காரணத்தினால் அந்த விசாரணையை குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாலசுதந்திரத்தின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் பிறந்த  நாளை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினரால் தாக சாந்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இன்று  மட்டக்களப்பு ஊரணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதன்போது பாலசுந்தரத்தின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மசாந்திக்கான மௌன பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

பாலசுந்தரம் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரல் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் பாலசுந்தரத்தின் பெற்றோர் தனது மகனுக்கான நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் கொலை செய்த குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இந்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,அரசியல்வாதிகள் பொதுமக்கள் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil News