நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை வருமா? சுதத் சமரவீர விளக்கம்

நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஏற்படும் நிலவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 101 பேருக்கு தொற்று ஏற்பட்டமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் அந்தப் பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், “எதிர்வரும் நாட்களில் காணப்படும் நிலவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா? என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றார் சுதத் சமரவீர.