ஜனாதிபதி அநுராவின் சீனா விஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது,அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர்என சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் குளோபல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் 17 திகதி முதல் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனசீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுரகுமாரதிசநாயக்க சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயம் இது.இந்த விஜயம் சீனா இலங்கை உறவுகளிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
1957 இல் இரண்டு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இரண்டு நாடுகளும் நீண்டகால நண்பர்களாக அயலவர்களாக விளங்குகின்றன.
மாறிவரும் சர்வதேச இராஜதந்திர சூழ்நிலைகளை எதிர்கொண்டு இரண்டு நாடுகளினதும் உறவுகள் வலுவானதாக விளங்குகின்றன. எப்போதும் நிலையான உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளன. வெவ்வேறு அளவிலான இரண்டு நாடுகள் எவ்வாறு சிறந்த நட்புறவையும் பரஸ்பரம் இரண்டு நாடுகளிற்கும் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பையும் பேண முடியும் என்பதற்கு சீன இலங்கை உறவுகள் உதாரணமாக உள்ளன என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்தின் மூலம் காலத்தினால் கௌரவிக்கப்பட்ட உறவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும்,பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவதற்கும்,புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும்,சீனா தயாராக உள்ளது என அதன் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்’ என்றுள்ளது.