இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் -புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்காவிடம் கோரிக்கை

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்,  சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஆறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

தமிழர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றன என தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள், யுத்தத்தின் இறுதி கட்டத்தில் உயிரிழப்புகள் 146,679 ஆக இருக்கலாம் என தெரிவித்துள்ளன.

இலங்கையின் சுதந்திர தினம் காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துகின்றது என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது சுயசரிதையில் மோதலின் இறுதி கட்டங்களை இனப்படுகொலையை ஐக்கியநாடுகள் தடுக்க தவறிய தருணம் என குறிப்பிடுகின்றார் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளன.

இலங்கை பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்று 75 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகள் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையில் உள்ள ஈழதமிழர்களிற்கு இது துயரம் நிறைந்த தருணமாக காணப்படும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது காலனி ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முறையற்ற மறுகாலனியாக்கம், நியாயமற்ற அதிகாரப்பகிர்வு,சுதந்திரத்திற்கு பின்னர் தொடர்ந்து வந்த சிங்கள பௌத்த அரசாங்கங்களின் கீழ் தொடர்ந்த அடக்குமுறை மூலம் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் விதத்தில் சுதந்திரம் காணப்படுகின்றது எனவும் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

யுத்த குற்றத்திற்காகவும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காகவும்  அரசாங்கம் தங்களிற்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலைக்காகவும்  இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளன.

மேலும் அமெரிக்க நிர்வாகம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமைக்கு ஆதரவளிக்கவேண்டும்,ஈழத்தமிழர்கள்  தங்கள் நிலையை ஜனநாயக ரீதியிலும் அமைதியான முறையிலும் தீர்மானிப்பதற்கான சுதந்திர சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கான முயற்சிகளிற்கு ஆதரவளிக்கவேண்டும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தனக்குள்ள செல்வாக்கை அமெரிக்கா பயன்படுத்தவேண்டும்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும்  இந்த அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.