இலங்கை உணவு நெருக்கடியை தவிர்ப்பதற்கு இன்னும் அதிகமாக செயற்பட செய்ய வேண்டியுள்ளது- ரணில்

உலக உணவு நெருக்கடி தொடர்பில் G7 கூட்டமைப்பு இலங்கைக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை உணவுக்காக செலவிட முன்வந்துள்ளதாக தெரிவித்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் உணவு நெருக்கடியை தவிர்ப்பதற்கு இன்னும் அதிகமாக செயற்பட செய்ய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது உரையாற்றிய பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. சில அறிக்கைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 7.5 மில்லியன் பேர் வரை இருக்கலாம் என்று கூறுகின்றன.

இலங்கையின் சராசரி நெல் உற்பத்தி பொதுவாக 24 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும். இருப்பினும், 2021 இல் 16 மில்லியன் மெட்ரிக் தொன்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே இலங்கை தனது அரிசி தேவையில் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு தொடர்பான G7 உலகளாவிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உலக வங்கியும் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு எமக்கு வழங்க முன்வந்துள்ளது. அவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அரசாங்கம் நல்லதொரு பாதுகாப்புத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் பொருளாதார நெருக்கடி தவறான பொருளாதார கொள்கைகள் என்றாலும் உலகளாவிய நெருக்கடி மற்றொரு முக்கிய காரணமாகும் . உக்ரைன் யுத்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் எங்களைப் பாதிக்கின்றன.

பொருளாதாரத் தடைகள் எங்களைப் பாதிக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. இருப்பினும், அது மூன்றாம் உலகத்தை பாதிக்கும். ரஷ்யாவும் உக்ரேனும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்கபட வேண்டும், “என்று அவர் மேலும் கூறினார்.