யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை, தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவத்தினர் கையகப்படுத்தி அதனை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, குறித்த காணியில் விவசாய பண்ணைகள், கால்நடை பண்ணைகள் என்பவற்றை அமைத்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர்.
அப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சுமார் 32 வருட காலங்களுக்கு மேலாக நலன்புரி முகாம்கள், உறவினர் வீடுகள், வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும் தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி கடந்த 11 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.