பண்ணையாளர்கள் பாலுற்பத்தி துறையை விட்டு விலகி செல்லும் நிலைமை-வைத்தியர் எஸ்.சுகிர்தன் 

பாலுற்பத்தி துறையை விட்டு விலகி செல்லும் நிலைமை

பெரும்பாலான பண்ணையாளர்கள் பாலுற்பத்தி துறையை விட்டு விலகி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர்  வைத்தியர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு தொடர்பாக அவரால் இன்று (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலமை காரணமாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவானது எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வழிகோலியுள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் கடந்த காலங்களில் தன்னிறைவு பெற்றுக்காணப்பட்ட எமது நாடானது தற்போது கால்நடை மருந்துகள் மற்றும் கால்நடை தீவணங்களின் விலை உயர்வினால் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் புரதச்சத்தை வழங்கும் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் பற்றாக்குறையால் மக்களிடையே மந்த போசணை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பாலுற்பத்தியை அதிகரிக்க அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்காக வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கப்பெறாமையால் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட பாலுற்பத்தியை பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் அதிகரிக்கப்பட்ட தீவன மற்றும் கால்நடை மருந்துகளின் விலையினால் பாலுற்பத்திக்கான செலவீனம் மேலும் 50% ஆல் அதிகரித்துள்ளமையினால் பண்ணையாளர்களுக்கான இலாபமானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் பாலுற்பத்தித்துறையை விலகி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 42% ஆக காணப்படும் உள்ளூர் பாலுற்பத்தியானது எதிர்காலத்தில் 30% ஆக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்நியசெலவானி நெருக்கடியினால் உணவு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூட முடியாத இத்தருணத்தில் உள்நாட்டு உற்பத்திச்சரிவு என்பது நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை அதிகப்படுத்தும் என்பதை வலியுறுத்தி கூறிக்கொள்கிறோம். மேலும் இப்பாதகமான பொருளாதார மற்றும் அரசியல் சூழல் உருவாகுவதற்கு அரசாங்கமே நேரடி பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு அரசாங்கமானது தனது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற தவறியதன் காரணமாகவே இந்த நிலமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News