இலங்கையில் அதிகரித்துள்ள பாலியல் வன்முறைகள்

கடந்த  ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது  அதிகமெனக்கூறப்படுகின்றது. இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை, ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற நிலையில் இந்த பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 273 வன்புணர்வுகள் இளம் வயதினருடன் தொடர்புடையவையாகும்.

இதேவேளை ஒப்புதலுடன் இடம்பெற்ற பாலியல் செயற்பாடுகள் பெரும்பாலானவை காதல் விவகாரங்களுடன் தொடர்புடையவை. எனினும் பாதிக்கப்பட்ட பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் இது பாலியல் வன்புணர்வுகளாகவே கருதப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 363ஆவது பிரிவின்படி, 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது சட்டப்பூர்வ பாலியல் வன்புணர்வுக்கு சமமாகும் என்று காவல்துறை   தெரிவித்துள்ளது.