ஈராக் தலை நகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது தொடங்கி இன்று வரை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுததாரிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்தும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி தரும் விதமாக அண்மையில் அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறி வைத்து வான் வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஆதரவு ஆயுததாரிகள் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் பாக்தாத்தின் பசுமை மண்டலத்திற்குள் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று அதிகாலை இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதுபோல் மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் மீது நடந்த இந்த ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாக ஐக்கிய அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.