சஜித் அணியிலுள்ள எட்டு எம்.பி.க்கள் ரணிலுடன் இணைய திட்டம்? மே தினத்தன்று கட்சி தாவுவாா்கள்

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே தினத்தன்று இவர்கள் கட்சித் தவாலுக்கு தயாராகி வருவதாகவும், இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தரப்பு பிரபல அமைச்சர் ஒருவர் இது தொடர்பில் குறித்த குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கட்சித் தாவுவதற்கு திட்டமிட்டுள்ளவர்களிடையே கொழும்பு, கேகாலை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எம்.பிகள் சிலரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்முடன் இணைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.

தங்களுடன் இணைந்துகொள்வோரை வரவேற்கும் மேடையாக மேதின மேடையை பயன்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் செயற்படும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் தமது கட்சியுடன் இணைப்பதற்கான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.