நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வியடையும் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வி அடையும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கீவ்வில் உள்ள இரண்டாம் உலகப் போர் போர் நினைவு சின்னம் அருகே நடந்த நிகழ்வில் ஜெலன்ஸ்கி பேசும்போது,

“நாஜிக்களை போலவே நவீன ரஷ்யா மீண்டும் கொண்டு வரும் பழைய தீமைகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும். அப்போது நாங்கள் ஒன்றாகத் தீமையை அழித்ததைப் போலவே, இப்போதும் அதேபோன்ற தீமையை நாங்கள் ஒன்றாக அழித்து கொண்டிருக்கிறோம். இரண்டாம் உலகல் போரில் நாஜிக்கள் தோற்கடிப்பட்டதை போல ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும். இங்கு நடந்த சித்தரவதைகள், கொலைகள் அனைத்திற்கும் ரஷ்யாவே பொறுப்பு. இதற்கெல்லாம் எங்களின் சுதந்திரம் மூலம் பதில் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களை சமீபத்தில் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த மார்ச் மாதம் ரஷ்யா சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற புதின் – ஜி ஜின்பிங் சந்திப்பு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி ஏற்படவே சீன விரும்புகிறது என்று ஜி ஜின்பிங் கூறியிருந்தார். ஜி ஜின்பிங்கின் மாஸ்கோ பயணத்தைத் தொடர்ந்து, அவருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.