ரோஹிங்கியா அகதிகளுக்கு சர்வதேச ஆதரவு: ரோஹிங்கியா அகதிகளுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கு தஞ்சமளித்திருக்கும் வங்கதேசத்திற்கும் தொடர்ச்சியான சர்வதேச ஆதரவு தேவை என ஐ.நா. அகதிகள் முகமையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 13 முதல் 18ம் திகதி வரை அகதிகளுக்கான ஐ.நா. துணை உயர் ஆணையர் கெல்லி கிளெமென்ட்ஸ் மற்றும் ஆசியாவிற்கான ஐ.நா. அகதிகள் முகமையின் இயக்குநர் இந்திரிக்க ரத்வத்த வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம்களை பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து வெளியிட்ட ஐ.நா. அகதிகள் முகமையின் அறிக்கையில், பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பாதுகாப்பு தேவையான ரோஹிங்கியா அகதிகளை வேறொரு நாட்டில் குடியமர்த்துதல், வெளிநாடுகளில் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளை ரோஹிங்கியா அகதிகளுக்கு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட மாற்றுத் தீர்வுகள் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில், சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.