எரிவாயுவை வழங்க கோரி திருமலை மட்டக்களப்பு வீதியை மறித்து மக்கள் போராட்டம்

சமையல் எரிவாயுவை வழங்குமாறு வழியுறுத்தி திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இப்போராட்டமானது,  மட்டக்களப்பு – திருகோணமலை வீதியை மறித்து  ஒரு மணிநேரம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து இன்றைக்கு ஒன்பது நாட்களாக மூதூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டு மூதூர் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய பகுதிகளுக்கு நேற்றிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மூதூருக்கு இன்னும் வழங்கப்படவில்லையென தெரிவித்தும், தமது பகுதிக்கு சமையல் எரிவாயுக்களை வழங்குமாறு தெரிவித்தும் சிலிண்டர்களை வீதியின் நடுவே வைத்து மக்கள்  எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து,  சம்பவ இடத்திற்கு மூதூர் காவல்துறையினர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் ஆகியோர்கள் வருகை தந்து நாளையதினம் மூதூருக்கு 400 சமையல் எரிவாயுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்ததையடுத்து,  மக்கள் அங்கிருந்து களைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.