தேசிய பிரச்சினை தீர்வு:வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுடன் மட்டும் நடத்தப்படும் பேச்சுவார்த்தை முழுமையடையாது-செல்வம்

தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பில் வடக்கு, கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளை இணைத்துக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும், அவ்வாறு இல்லாத பேச்சுவார்த்தைகள் ஏமாற்றமாகவே அமையுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனியாக வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுடன் மட்டும் நடத்தப்படும் பேச்சுவார்த்தை முழுமையடையாதென தெரிவித்த அவர், ஜனாதிபதி இது தொடர்பிலான தமது தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு அடுத்த சுதந்திர தினத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் அதற்காக வடக்கிலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் ஜனாதிபதி ஏற்கனவே சபையில் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.