நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் (16.08.2020) இடம்பெற்றன.

கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இறுதிக் கட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் வட்டுவாகல் பாலத்தை அண்மித்துள்ள நந்திக் கடல் முகத்துவாரப் பகுதியில் குவிந்து கிடக்கின்ற கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த முதற்கட்டப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யுத்தம் மற்றும் தமிழ் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தூர்வாரி புனரமைக்கப்படாத நிலையில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தத்தினாலும் நந்திக்கடலில் குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்களும் சேற்று படுக்கைகளும் நந்திக்கடலின் இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மீன், இறால் போன்ற கடலுணவுகளின் உற்பத்தி குறைவடைந்தமையினால், குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டன. குறித்த விடயம், கடந்த வருட இறுதியில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயத்தில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் பலனாக நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.