இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் வழங்குவார்-எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதியை போல  பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 12 ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பை  சிறந்தது என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பசுமை பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை விட பொருளாதார யதார்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை நினைத்து பார்ப்பது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் ஆனால் அவரது பணி மிகவும் கடினமானது அதற்காக அவரை எவரும் பாராட்டப்போவதில்லை  ஏனென்றால் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளே ஒரேவழி எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அதிக வரிகள் தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம், குறுகிய காலத்தில் வலிகள் காணப்படும்,ஆனால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமானவையாக உள்ளன என இலங்கையின் சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக்சொல்ஹெய்ம் ஐஎஎனஎஸ ற்க்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பசுமை அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எலெக்ரிக் மொபிலிட்டி மரநடுகை பசுமை விவசாயம் சுற்றுசூழலிற்கு உகந்த சுற்றுலா ஆகியவை வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பிற்கான பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவை வெற்றிபெறும் கொள்கைகள் இவை சுற்றுசூழலிற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் சிறந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்ற அடிப்படையில் நான் அவர் தனது பணியாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை கவருவதற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுவேன் எனவும்  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா இந்தியா  ஐரோப்பா மற்றும் ஏனைய உலகநாடுகளி;ல் இருந்து சிறந்த சுற்றுச்சுழல் செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இலங்கை இருப்பிற்கே அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் ஆம் என பதிலளித்துள்ளார்.

இலங்கையின் வறண்ட பகுதி தொடர்ந்தும் உலர்வலயமாகவும் ஈரமான பகுதி ஈரமாகவும் காணப்படும் நாங்கள் மிக மோசமான காலநிலையையும் மண்சரிவையும் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.