பூநகரி – கிராஞ்சி இலவன் குடா கடற்பகுதியில் வாழும் மக்கள் தொடர் போராட்டம்

பூநகரி – கிராஞ்சி இலவன் குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள்  மூன்றாவது நாளான நேற்று முதல் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கிராஞ்சி  இலவன்குடா  கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள், சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மீனவர்கள் உள்ளடங்களாக மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கை கொடுத்து மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறித்த மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில் தமக்காக ஒரு அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றமையால் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு,தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.