இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஜனவரியில் ஆரம்பிக்க திட்டம் -அமைச்சர் நிமல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தம்பதீவ யாத்திரைக்குச் செல்லும் இலங்கை யாத்ரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இங்கு கட்டணம் குறித்து கப்பல் உரிமையாளர்கள் கூறுகையில்,
ஒரு பயணிக்கான கட்டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்லலாம் என்றனர்.