இலங்கையில் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் மக்கள் போராடி வருகின்றனர்

இலங்கையில்,நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன.

இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என்று இலங்கையின் பிரதான மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மருத்துவமனைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன.

வெளிநோயாளர் சேவைகளுக்கு அடிப்படையான பராசிட்டமோல், விட்டமின் சி மற்றும் சேலைன் போன்றவற்றை வழங்குவதில் கூட சிரமம் உள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரத்னசிங்கத்தை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புற்றுநோய், கண் மருத்துவமனைகள் போன்ற சிறப்பு வசதிகளை கொண்ட மருத்துவமனைகள் நன்கொடையில் இயங்குகின்றன என்று ரத்னசிங்கம் கூறினார்.

எனினும் இது தொடர்பான விளக்கமளிப்புக்காக, தாம் இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் மூத்த சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டபோதும், பதில் வழங்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.