பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக பலாலியில் மேலும் நிலத்தை அரசாங்கம் அபகரிக்கப் போவதாக தினக்குரல் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக உள்ளது.
தற்போது பலாலி ஓடுபாதை 1,300 மீற்றராகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3,400 மீற்றராகவும் ரத்மலானை விமான ஓடுபாதை 1700 மீற்றராகவும் உள்ளது.
தற்போது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள உள்ள பலாலி விமான நிலையத்திற்கான விமான ஓடுபாதையை மேலும் 2,400 மீற்றர் வரை நீடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இரத்மலானை விமான ஓடுபாதையின் அளவை விட அதிகமானதாகும்.
அரசாங்கம் மேலும் காணிகளை அபகரிக்கும் நோக்கில் செயற்படுவதால் பலாலி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக காத்திருக்கும் பலாலி மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தாலும், உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பலாலி பகுதிக்குள் விமான ஓடுபாதை நீடிப்புக்காக மேலும் காணிகளை அபகரிக்க இந்த அரசாங்கம் சிந்திக்கின்றது.
இந்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட வேண்டும். யாழ்ப்பாண மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். எங்களுக்கும் கருத்துகள் உள்ளன.
நீங்கள் உண்மையில் மிகவும் திறமையான சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கப் போகிறீர்கள் என்றால் உண்மையில் யாழ்ப்பாணம் பொருத்தமற்ற இடமாகும். அது ஒரு மூலையில் உள்ளது. வன்னியில் எங்காவது கட்டலாம். வவுனியாவில் அல்லது அனுராதபுரத்தில் அமைக்கலாம், கிழக்கில் அமைக்கலாம். மத்திய பகுதி யொன்றில் அமைக்கவேண்டும். ஏதோ ஒரு மூலையில் அமைக்கத் தேவையில்லை.
எனவே இவை விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். மேலும், பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன் என்றார்.