மாநகரசபையின் கட்டளைச் சட்டம் மீறப்படுகின்றது- தி.சரவணபவன் 

மாநகரசபையின் கட்டளைச் சட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையில், மாநகரசபையின் கட்டளைச் சட்டம் மற்றும் இலங்கை சோசலிச குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாணசபை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்  குற்றம்சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக 2020ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி மூலமான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப் பட்டு வருகின்றன. இதன்கீழ் மட்டக்களப்பு விமான நிலைய பிரதான வீதியின் 01ஆம் மற்றும் 02ஆம் குறுக்கு வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வட்டார உறுப்பினர் அ.கிருரஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டு வீதி அபிவிருத்தி பணியை ஆரம்பித்து வைத்தார்.

மாநகரசபையின் 20இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய மாநகர முதல்வர்,

“இந்த வேலைத்திட்டங்கள் 2020ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் வேறு நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள் இருந்த காரணத்தினால் டிசம்பர் மாதத்தில் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருந்த போதிலும் 2020 டிசம்பரில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த வேலைகளை அமுல்படுத்துவதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டது. இதேபோன்று 2021ஆம் ஆண்டு வேலைத்திட்டங்களும் தாமதப்படுத்தப் பட்டிருந்த காரணத்தினால் மாற்று திட்டமாக மாநகரசபை நேரடியாக வேலைத்திட்டங்களை செய்யாது வெளியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இதனை வழங்கி பூர்த்திசெய்வது என்று மாநகரசபையின் தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாருக்கு வழங்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றது.

அந்த அடிப்படையில் 2020,21ஆம் ஆண்டுகளில் பூர்த்திசெய்யப்படாத வேலைகளை வெளியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி முடிக்கப்பட்டு வருகின்றது.
மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு தடையாகயிருக்கும் அதிகாரி மாற்றப்படும் பட்சத்தில் மாநகரசபை நேரடியாக களத்திலிறங்கி பொதுமக்களுக்கு அதியுட்ச நன்மைகளை வழங்ககூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

வெளியாருக்கு ஒப்பந்தம் வழங்கும்போது சுமார் 40வீதமான வேலைகள் குறைவாக செய்யக்கூடிய நிர்ப்பந்தம் உள்ளது.மாநகரசபை வளங்களை பயன்படுத்தி நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது ஒதுக்கப்பட்ட நிதியானது பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதனால் மதிப்பீட்டுக்கு அதிகமான வேலைகளை செய்யகூடியதாகயிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபையில், மாநகரசபையின் கட்டளை சட்டம் இலங்கை சோசலிச குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாணசபை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆணைக்குழுக்களை நிறுவியிருந்துடன் அதன் ஊடாக மாநகரசபையின் கட்டளை சட்டம் மீறப்பட்டுள்ளது தெளிவாகியிருந்தது.

மாநகரசபையின் கட்டளை சட்டம் மீறப்பட்டுள்ள நிலையில், அதனை மீறிய அதிகாரிக்கு எதிராக எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.அவ்வாறு ஓழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தால் மாநகரசபையின் செயற்பாடுகளில் எந்தவித தடங்கல்களும் ஏற்பட்டிருக்காது” என்றார்

Tamil News