தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோருகின்றன – பிரதமர் குற்றச்சாட்டு

‘பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கிறது’ என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கனவு’ என்றும் அரலகங்வில மகாவலி அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.

‘அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்காக சமர்ப்பிக்கப்படும்’ என்று கூறிய பிரதமர், ‘தற்போதைய அரசாங்கம் கடந்த தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அது மக்களால் பாதுகாக்கப்படும்’ என்றும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எங்கள் அரசுக்கு இருப்பதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு தரவு அடிப்படையிலான மாற்றங்களைச் செய்து வருவதாகவும்’ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

‘இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறிய பிரதமர், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்’ என்றும் கூறினார்.

‘முந்தைய அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான வேலைத்திட்டம் உள்ளடக்கப்படவில்லை’.
‘தற்போதைய அரசாங்கம், ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பது, ஆசிரியர் பயிற்சி வழங்குவது மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன கல்வி அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில்முறைத் திறனை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.