46 பேரே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் -அமைச்சர் அனுராத ஜயரத்ன

பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் தற்போது 46 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி 45 ஆண்களும் ஒரு பெண்ணும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் 14 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களில் சிலரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தற்போது 22 பேரே சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர்களில் சிலர் நீண்ட காலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

எஞ்சியுள்ள கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கு ஏற்கனவே சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.