அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், அந்நாட்டின் மீதான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கி தற்போதுவரை நடந்து வருகின்றது.
இதனிடையே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இராணுவ உதவி வழங்கி வந்தன. அதன் அடிப்படையில், நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது.
எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில் ரஷ்யாவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்தச் சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப தன் அணு ஆயுதக் கொள்கையில் ரஷ்யா மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்ரைன்), அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர்த் தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்ட நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், பதிலுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களில் ரஷ்ய அதிபர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.