அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை- இரா.சம்பந்தன் 

இலங்கையில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளதோடு பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.