தேசிய இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சில் இந்திய மேற்பார்வை தேவை – விக்கி, செல்வம், சித்தார்த்தன், சுரேஷ் கோரிக்கை

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே அத்தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த தலைவர்கள் வீரகேசரியிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.

ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.

எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.

ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டியது அவசியமாகும்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், அச்செயற்பாடு எவ்வாறு சாத்தியமாகும், எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியாதுள்ளது.

ஆனால், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பாகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய செயற்பாடுகளின்படி, பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சில பேர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால், நான் அதை சொல்லாததற்கான காரணம், ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம், என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதாலாகும்.

ஆனால், நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதனடிப்படையில் அவை நடைபெற வேண்டும். ஜனாதிபதி நல்ல நோக்கத்துக்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதார பிரச்சினைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும், இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவவிட்டு விடக்கூடாது. ஆகவே, தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார்.

சித்தார்த்தன்

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பேச்சுக்களில் சாதகமான நிலைமைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

எதிர்வரும் காலத்திலும், அவ்விதமான நிலைமைகள் நீடிப்பது பொருத்தமற்றதாகும்.

ஆகவே, பேச்சுவார்த்தைகள் உரிய இலக்கினை அடைவதற்கும், அவை வெற்றி பெறுவதற்கும் அரசாங்க மற்றும் தமிழ்த் தரப்பினை வழிநடத்திச் செல்வதற்கும் மேற்பார்வை அமைந்திருத்தல் மேலும் நன்மைகளையே ஏற்படுத்தும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றை பார்க்கின்றபோது, ஒவ்வொரு தடவையும் பேச்சுக்களை முன்னெடுப்பதும், ஒப்பந்தங்களை செய்வதும், பின்னர் சொற்ப காலத்தில் அவற்றை முறித்தெறிந்து செயற்படுவதுமே வாடிக்கையாக மாறிவிட்டது.

இவ்வாறான நிலையில் தான் தற்போது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பற்றிய பேச்சுவார்த்தையின் போது அம்மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால், நிச்சயமாக மூன்றாம் தரப்பின் மேற்பார்வை அவசியமாகின்றது.

அவ்வாறில்லாமல், அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கின்றபோது அப்பேச்சுக்கள் வெறுமனே சர்வதேசத்துக்கான கண்துடைப்பாகவே சித்தரிக்கப்படும் ஆபத்துள்ளது.

இதனை விடவும் இந்தியா தமிழர்களின் விடயத்தில் நீண்ட காலம் வகிபாகத்தினை கொண்டிருப்பதால், இந்தியாவின் மேற்பார்வையானது மிகவும் அவசியமானதாகும் என்றார்.

நன்றி- வீரகேசரி