இந்தியா: ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் 27 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் பதிவு – உச்ச நீதின்றத்தில் மத்திய அரசு தகவல்

கொரோனா தொற்று நீடிக்கும் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன், நல உதவிகளை அளிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, ‘‘மாநில அரசுகள் அளிக்கும் தகவல் அடிப்படையில், தேசிய தகவல் மையத்துடன் ஆலோசித்து உருவாக்கப்பட்ட ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் சுமார் 27.45 கோடி முறைசாரா தொழிலாளர்கள் அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதையடுத்து இவர்களுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கையை, ஜூலை 20-ம் திகதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவிட்டபடி அனைத்து தகவல்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். முறைசார தொழிலாளர்களின் விவரங்களை அளிப்பதில் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tamil News