குரங்கு அம்மை இலங்கையிலும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் -மருத்துவத்துறை எச்சரிக்கை

இலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக   ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர   எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் அறிகுறிகள் நன்கு வெளிப்படுவதால் நோயாளர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும். கொரோனாவுடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாச அமைப்பு, சளி அல்லது தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் வைரஸ் பரவும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இது விலங்குகள் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரவக்கூடும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் ஒரே தட்டு, கோப்பை அல்லது பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், கட்டிகள் மற்றும் சிக்குன் குனியா போன்ற தோல் வெடிப்புகள் குரங்கு காய்ச்சலின் சில அறிகுறிகளாகும்  வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு வெற்றிகரமான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன என்றும், அவை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியுமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேசத்திற்கான எச்சரிக்கை அறிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.