மருதமுனை 3ஆம் பிரிவு நேற்று முதல் முடக்கம்! ஒரே நாளில் மூவர் தொற்றுக்குப் பலி

8 மருதமுனை 3ஆம் பிரிவு நேற்று முதல் முடக்கம்! ஒரே நாளில் மூவர் தொற்றுக்குப் பலிகல்முனைப் பிராந்தியத்தின் கல்முனை தெற்கு சுகாதாரப் பகுதிக்குட்பட்ட மருதமுனை 3ஆம் பிரிவு நேற்று வெள்ளிக் கிழமை நண்பகல் முதல் தனிமைப் படுத்தலுக்காக முற்றாக முடக்கப் பட்டுள்ளதென கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசம் ஆபத்தான பிரதேசமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

Dr.SUKUNANA மருதமுனை 3ஆம் பிரிவு நேற்று முதல் முடக்கம்! ஒரே நாளில் மூவர் தொற்றுக்குப் பலி
டாக்டர் குண.சுகுணன்

கொரோனா தொற்றுக்கு இலக்காகி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த மூவர் ஒரே நாளில் மரணமடைந்ததனால் 100 பேருக்கு எழுமாறாக எடுக்கப்பட்ட பீ .சி.ஆர். பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டதை அடுத்து, மருதமுனை மூன்றாம் பிரிவை எதிர்வரும் 14 நாட்களுக்கு முடக்க தீர்மானித்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்தார்.

ஒரே நாளில் மூவர் மரணமடைந்ததை அடுத்து 200 பேருக்கு மருதமுனை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் இருவர் மட்டுமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில் 100 பேருக்கு எழுமாறாக எடுக்கப்பட்ட பீ .சி.ஆர். பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டமையானது ஆபத்தான ஒன்றாகும். அதனாலயே மருதமுனை மூன்றாம் பிரிவை எதிர்வரும் 14 நாட்களுக்கு முடக்க கல்முனை மாநகர முதல்வர், கல்முனை பிரதேச செயலாளர், பொலிஸ், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பலர் அடங்கிய குழுவினர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி மாலை 05 மணிமுதல் மருதமுனை பிரதேசத்தில் போக்குவரத்து தடை அமுலாகுவதுடன் மருந்தகத்தை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும். அத்துடன் மூடப்பட்டுள்ள பிரதேசத்தில் தொடர்ந்தும் பீ .சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளத்துடன் மூடப்பட்ட பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களுக்கும் அண்டிஜன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இன்று சனிக்கிழமை அதற்கருகாமையில் உள்ள மருதமுனை 1ஆம் பிரிவு 2ஆம் பிரிவு போன்ற பிரிவுகளில் 150பேருக்கு அன்ரிஜன் சோதனை நடாத்த திட்டமிடப் பட்டுள்ளது என்றும் டாக்டர் சுகுணன் தெரிவித்தார்.

இதே வேளை எதிர்வரும் நாட்கள் பெருநாள் காலம் என்பதனால் பொது மக்கள் சுகாதார நடை முறைகளில் வழமையாக காட்டும் அசமந்த போக்கை இனியும் கடைப் பிடிக்காமல் தீவிரமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டு கொண்டார்.