யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை (24) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த தினத்தன்று நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ அரசுகள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லுமாறே நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. அதனால்தான் இந்த சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த தீர்மானித்திருக்கிறோம்.
எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
உறவுகளைத் தேடித் திரிந்த சில அம்மாக்கள், வலி சுமந்த இதயத்தோடு மரணித்துப் போனார்கள். அவர்கள் தொடர்பான புத்தகமொன்றை நாங்கள் வெளியிடவிருக்கிறோம். காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாகவும் புத்தகம் வெளியிடுவதற்கு இருக்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடங்கள் நாங்கள் யார் யாருக்கு மகஜர் கையளித்தோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார் யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள், தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்பவற்றையும் உள்ளடக்கி, ஒரு புத்தகம் வெளியிட நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
வருகிற 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கைகூப்பி அழைக்கின்றோம். காணாமலாக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17 ஆயிரம் உறவுகள் 8 மாவட்டங்களிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அம்மாக்களும் மரணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மாநாட்டுக்கு அனைவரையும் கை கூப்பி அழைக்கின்றோம்.
‘ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த தினத்தை முன்னிட்டு தான் இந்த மகாநாட்டை நடத்துகிறோம்.
இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம், கண்ணை திறந்து எங்களுக்கு, வலிசுமந்த அம்மாக்களுக்கு, கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தரும் என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மாநாட்டை செய்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



