மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (17) கைத்தொழில் அமைச்சிடம் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மன்னார் கற்றாலைத் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடிய போது, நாட்டின் சமயத்தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மக்கள் கற்றாலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அந்த வாக்குறுதிகளைப் புறந்தள்ளிவிட்டு, சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மன்னார் மாவட்டத்திலேயே இந்த ஆபத்தான கனிம மணல் அகழ்வுக்கான முதலாவது திட்டத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையின் கடற்கரைப் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் அகழ்வு மற்றும் தேடல் பணிகளுக்காக 300க்கும் அதிகமான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல அனுமதி பத்திரங்கள் ஏற்கனவே சுரங்க அகழ்வு அனுமதி பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த அகழ்வுப் பணிகளால் கடற்கரையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள், நிலத்தடி நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, இலங்கைக் கடற்கரையை நாடி வரும் அழிந்துவரும் உயிரினங்களான கடல் ஆமைகள் போன்ற பல்லுயிர்களும் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள ‘கேபிட்டல் மெட்டல்ஸ்’ போன்ற நிறுவனங்கள், முன்னதாக லைபீரியாவில் சுரங்க வணிகத்தில் ஈடுபட்டிருந்தபோது முழு கிராமங்களையே பலவந்தமாக அப்புறப்படுத்தி கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவை, இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை வரை அந்நாட்டின் விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தற்போது இலங்கையின் பொருளதார நிலையைப் பயன்படுத்தி கடற்கரை வளங்களைச் சுரண்ட அவை அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக முதலீட்டுச் சபைக்கு 15 நிறுவனங்கள் தங்களது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ள போதிலும், இதற்கான கோரிக்கைகள் எதுவும் கோரப்படாமல், எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றியே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்குமாக 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே முதலீடாகக் கிடைக்கவுள்ளது. ஆனால், இலங்கையின் சாதாரண ஒரு வருட தென்னை ஏற்றுமதி வருமானம் மட்டுமே 1,200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதாவது, ஒரு வருட தென்னை ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய வருமானத்தை விடக் குறைவான தொகையையே ஒட்டுமொத்த கடற்கரையையும் அழித்துப் பெறவுள்ளனர். இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியில் தற்போது நாட்டிற்குள் வந்துள்ள உண்மையான முதலீட்டுத் தொகை வெறும் 9.96 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. கடந்த காலங்களில் தாங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போதெல்லாம், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அலட்சியப்படுத்தியவர்களின் கண்கள் இப்போது திறக்கப்பட வேண்டும்; ஏனெனில், கடந்த காலங்களின் அனைத்துக் கணிப்புகளும் இன்று உண்மையாகி நிற்கின்றன.
மேலும், நாட்டிற்குப் பிரம்மாண்ட முதலீடு கிடைக்கும் எனக்கூறப்பட்ட போர்ட் சிட்டியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவுக்குச் சென்றுவிட்ட நிலையில், இலங்கையின் வசம் உள்ள நிலப்பகுதியில் எந்தவொரு முதலீடுகளும் நடக்காமல் வெறும் குதிரையோட்டப் பந்தயம் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், உள்நாட்டுத் தேசியக் கடன் மறுசீரமைப்பிற்காக உழைக்கும் சாதாரண மக்களின் ஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பலமுறை கூறியும் அரசாங்கம் அதையும் பொருட்படுத்தவில்லை, இன்றுவரை சாதாரண தொழிலாளர்களின் சேமிப்பிலிருந்து பணம் வெளியேறிக்கொண்டிருக்க, தனியார் வங்கிகளின் இயக்குநர்களும், பங்குதாரர்களும் மட்டுமே இலாபத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.



