லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதி நிலைநாட்டப்படும் என பிரதமர் உறுதி

03. ‘ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்’ என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சட்டமா அதிபருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்குமாறு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், பிரதமரிடம் கேள்வி இன்று எழுப்பினார்.

‘சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல் தலையீடு காணப்படக் கூடாது என அரசாங்கம் கூறுகின்ற நிலையில், பாதிப்படைந்த தரப்பினர் சட்டமா அதிபருக்கு எதிராக கடிதம் அனுப்பியுள்ளனர்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மிகவும் முக்கியமானதொரு விடயமென குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, ‘குறித்த கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த கடிதத்துக்கு பதிலளிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்’ தெரிவித்தார்.
‘லசந்த விக்ரமதுங்கவின் கொலை விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்’.

‘லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவின் கவலை தொடர்பில் தாம் நன்கு அறிந்துள்ளதாகவும்’ பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என அவரது மகளுக்கு தாம் உறுதியளிக்க விரும்புவதாகவும்’ பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்’. ‘லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய புதிய சாட்சியங்களை பெற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, தேவையேற்படுமாயின் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ‘இந்த விடயம் தொடர்பில் முழு நாள் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, ‘இது முக்கியமான விடயம் என்பதால் நாள் ஒன்றை ஒதுக்கி விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் இணங்குவதாக’ குறிப்பிட்டார்.

‘நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் அனைத்து மக்களும் இந்த விடயம் மிகவும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது’. ‘எனவே, அரசாங்கம் என்ற வகையில் இந்த விடயத்தில் முழுமையாக நீதி நிலைநாட்டப்படும்’ என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.