கிளிநொச்சியின் பளையில் விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய நபர் குறித்த மேலதிக விவரங்களை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெளியிட்டார்.
அக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் விசாரணைகளில் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர், இந்த சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சங்கீத் ஜயசேகர என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததும், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மோசடி தொடர்பான வழக்குகள் உட்பட மூன்று தனித்தனி குற்றவியல் வழக்குகளிலும் அவர் சந்தேகநபர் எனப் பெயரிடப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மருத்துவர் போல் ஆள்மாறாட்டம் செய்தும், முன்னதாக சில அமைச்சகப் பணியாளர்களுடன் இணைந்து ஆலோசகராகப் பணியாற்றியும் உள்ளார்.
அந்த நியமனங்கள் குறித்து அதிகாரிகள் தற்சமயம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த ஊடகச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் உள்ள அந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மாறாக, அந்த இடம் ஒரு விவசாயச் செய்கைக்கான பகுதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட இடத்துடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த எந்தத் தகவலும் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை.
சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில், பொதுமக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்த அந்தச் சந்தேக நபர் முயன்றுள்ளார்.
பயங்கரவாதத்திற்கோ அல்லது இன, மத ரீதியான பிளவுகளைத் தூண்டுவதற்கு இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கோ அரசாங்கம் இடமளிக்காது – என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.



