எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இணைந்திருப்பதே நன்மை பயக்கக்கூடியது என்று காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சக்கீனா இற்றூ (Sakina Itoo). முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பிரதேசத்தின் தன்னாட்சியை பறித்தெடுக்கின்ற முடிவை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி எடுத்த பின்னர், மக்கள் முன்னே தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும் தனக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 48 வயது நிரம்பிய இந்திய சார்பு நிலையைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான சக்கீனா இற்றூ தெரிவித்தார்.
“மக்கள் நடுவில் மீண்டும் என்ன முகத்தோடு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடமே எந்தவிதமான பதில்களுமில்லாத சூழலில் மக்களுக்கு நாங்கள் எதனைச் சொல்ல முடியும்” என்று பிரதேச அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்த இற்றூ, அல்ஜசீரா ஊடகத்துக்குத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, இந்தப் பிராந்திய சட்டசபையைக் கலைத்ததுடன் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த ஒரேயொரு பிரதேசத்தை, மாநில ஆட்சி நிர்வாக முறையைக் கொண்ட பிரதேசமாக தரம் குறைத்து, இவ்விடயங்களில் மக்களின் சனநாயக உரிமையைப் பறித்தெடுத்துவிட்டதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட முடிவு, 1980ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்கு முகங்கொடுத்த இப்பிரதேசத்துக்கு அபிவிருத்தியைக் கொண்டுவரும் என்று கூறி, இந்திய அரசு தமது முடிவை நியாயப்படுத்தியது. தேர்தல்களில் போட்டியிட்டு புதுடெல்லிக்கு விசுவாசமாக இருந்த அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்களிடமிருந்து பல தாக்குதல்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
இந்திய அரசுக்குச் சார்பான கொள்கையைக் கொண்டிருந்த தனது தந்தையார் கிளர்ச்சியாளர்களால் 1996ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் இற்றூ அரசியலுக்குள் நுழைந்தார். காஷ்மீர் சட்டப்பேரவையின் உறுப்பினராக 1996ஆம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களில் இற்றூ உயிர் பிழைத்திருக்கிறார்.
தென் காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குல்கம் (Kulkam) மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் மீது கடந்த ஏப்பிரல் மாதம் ஒரு கைக்குண்டு வீசப்பட்டது. ‘ஒன்றில் சுதந்திரம் வேண்டும் அன்றேல் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள வேண்டும்’ என்ற கொள்கையுள்ள கிளர்ச்சியாளர்கள் மிகவும் பலமாக இருக்கின்ற ஒரு பகுதியாக இக் குல்கம் பிரதேசம் திகழ்கிறது.
காஷ்மீர் பிரதேசத்தில் மிகப் பலம் வாய்ந்த கட்சியான இற்றூவின் ‘ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு’ (Jammu and Kashmir National Conference) இந்திய அரசுக்கு மிகவும் விசுவாசமான கட்சியாக இருந்தது. இருந்த போதிலும் அக்கட்சியின் மிகப்பலம் வாய்ந்த உயர் தலைவர்களான அப்துல்லா வம்சத்தை (Abdullah dsnasty) சேர்ந்தவர்கள் கடந்த வருடம் அரசினால் தடுத்து வைக்கப்பட்டார்கள். முன்னெப்போதும் இல்லாதவாறு, வேறு எவருடனும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு பாதுகாப்பு முடக்கத்துக்குள் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் வழமையான வேகத்தை விடக் குறைவான வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இப்பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
‘தேசிய மாநாடு’ என்று அழைக்கப்படும் இக்கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் ஆழமானவை. இப்பாதிப்புகளுடனேயே காஷ்மீரின் புதிய பிரதேச மற்றும் அரசியல் சூழலுக்கு தம்மை இயைபாக்கிக் கொள்ள இவை போராடிக்கொண்டிருக்கின்றன. “இந்தியாவுடன் இணைந்திருப்பதே எமக்கு நன்மை பயக்கும் என்றும் இந்தியாவே எமது தேசம் என்றும் நாங்கள் அடிக்கடி சொல்லி வந்தோம். ஆனால் இளையோர் இதனைக் கேட்பதற்குத் தயாராக இல்லை” என்று இற்றூ மேலும் தெரிவித்தார்.
இந்திய அரசினால் முற்றாகக் கைவிடப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக்கூடிய சூழலில், மேற்படி கட்சியின் உறுப்பினர்கள் பலர் அமைதியாகி, பொதுவாழ்க்கையில் இருந்தே மறைந்து போய்விட்டார்கள்.
“தனது தொழிலாளர்களுடன் ஊர்வலங்களைத் தான் நடத்திய போது தங்கள் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக மிகவும் வேதனைமிக்க நினைவுகள் தனக்கு இருக்கின்றன” என்று இற்றூ கூறினார். “முன்னர் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்ட போது அரசிடமிருந்து எமக்கு ஆதரவு கிடைத்திருந்தது. ஆனால் தற்போது இரு பகுதிக்கும் இடையில் நாங்கள் அகப்பட்டிருக்கிறோம்.” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த முப்பது வருடங்களாக காஷ்மீரில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் தேய்வடைந்ததன் காரணத்தினால் இந்திய அரசுக்குச் சார்பான அரசியல்வாதிகளுக்கு, அவர்களது விசுவாசத்துக்குப் பிரதியுபகாரமாக அரசிடமிருந்து பாதுகாப்பும் சலுகைகளும் கிடைத்திருந்தன.
“கடந்த வருடம் (2019) ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியும் அதற்குப் பின்னரும் புது டெல்லி மேற்கொண்ட இராணுவ நகர்வுகள், காஷ்மீர் பிரதேசத்துக்குரிய தீர்வுகள் அல்ல” என்று இரண்டு அமைச்சர்களை இப்பிரதேசத்துக்கு அளித்திருந்த மக்கள் சனநாயகக் கட்சியைச் (People’s Democratic Party) சேர்ந்த வாஹீட் பாரா (Waheed Para) தெரிவித்தார். மேற்படி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான மேபூபா முவ்டி (Mehbooba Mufti) ஒரு வருடத்துக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியத் துணைக்கண்டம், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவாகவும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காலத்திலிருந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த அரசர், சில நிபந்தனைகளோடு இப்பிரதேசத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்ததன் காரணத்தினால் பிரச்சினைகள் சிக்கலாக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சரத்தில் மேற்படி நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
“ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னரும் காஷ்மீர், பிரச்சினைக்குரிய ஒரு பிரதேசமாக இருந்தது மட்டுமன்றி இப்போதும் அது பிரச்சினைக்குரிய பிரதேசமாகவே இருக்கிறது” என்று 30 வயது நிரம்பிய பாரா அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.
“எமது மக்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ அவையனைத்தும் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டன என்பதே எமது ஏமாற்றமும் கவலையும் ஆகும். இந்திய அரசியலமைப்பின் ஊடாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று காஷ்மீரின் இளையோருக்கு நாங்கள் உறுதியளித்திருந்தோம். எமது மக்களோ அல்லது போராளிகளோ இதனை எதிர்க்கவில்லை. ஆனால் இந்திய அரசே இதற்கு எதிராகப் போய்விட்டது.”
“ஆயிரக்கணக்கான போராளிகள் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் – மிகப் பெரிய விலையைக் – கொடுத்திருக்கின்றன. திடீரென இப்படிப்பட்ட தீர்வுக்கு இடமேயில்லை என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது” என்று பாரா கூறினார்.
இப்பிராந்தியத்துக்கு தன்னாட்சியைக் கொடுப்பதற்குக் காரணமான, 370ஆவது சரத்தை நீக்கிய பின்னர் சிறைவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுள் இந்த இளம் அரசியல்வாதியும் ஒருவராவார்.
“சனநாயகத்துக்கு ஆதரவாக நாங்கள் பேசினோம். அப்படியிருக்க எமது வீடுகளிலிருந்து நாங்கள் வெளியே வர முடியாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.” என்றார் அவர்.
அரசியல் கட்டமைப்பு மாற்றப்பட்டிருக்கிறது
இந்திய அரசுக்கு சார்பான நிலையைக் கொண்ட பல அரசியல்வாதிகளுடன் அல்ஜசீரா உரையாடியது. அவர்கள் அனைவருமே தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு புது டெல்லி தமக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறினார்கள்.
மொகமட் யுசுவ் தரிகமி (Mohammad Yousuf Tarigami), காஷ்மீர் அரசியலைப் பொறுத்தவரையில் மிகவும் மூத்த அரசியல்வாதியாவார். கம்யூனிச கட்சியின் உறுப்பினரான இவர், 1996ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் குல்கம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவையின் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
“இப்பிரதேசத்தின் சுதந்திரத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த எதிர்ப்பு நிலை அரசியல்வாதிகளுக்கும் அதே வேளையில் இந்திய அரசுக்கு சார்பாக இருந்த அரசியல்வாதிகளுக்கும் இடையே வேறுபாட்டை புதுடெல்லி அகற்றி விட்டது” என்று தரிமி கூறினார்.
“இப்போது நாங்கள் எல்லோருமே ஒரே கோட்டில் தான் இருக்கிறோம். பயங்கரவாதிகளாக இருந்தாலென்ன, பிரிவினைவாதிகளாக இருந்தாலென்ன பொது அரசியலுக்குள் இருந்தாலென்ன எல்லோருமே இன்று ஒரே சிறையில் தான் இருக்கிறோம்” என்றார் அவர்.
“தற்போது இருக்கும் சூழல் முன்னெப்போதுமே இருந்திருக்காத ஒரு சூழல் என்றும் முழுக் காஷ்மீர் பிரதேசமுமே ஒரு சிறையாக மாற்றப்பட்டிருக்கின்றது என்பதோடு எல்லாவிதமான கருத்துகளைக் கொண்டவர்களுமே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.”
“நாம் செயற்படுவதற்கு இனி எந்தவிதமான இடமுமில்லை. எல்லா அரசியல் செயற்பாடுகளுமே தடைசெய்யப்பட்டிருக்கின்றன. நாம் மேற்கொண்டு செல்வதற்கு எந்தப் பாதையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் அரசியல் எப்போதுமே ஒரு வழிகாட்டலிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் தான் இயங்கி வந்திருக்கிறது என்பதுடன், புதுடெல்லியால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரந்த வடிவமைப்பையே பின்பற்றியிருக்கிறது என்று காஷ்மீரைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளரான ஐஜாஸ் அஷ்ரவ் வானி (Aijaz Ashraf Wani) தெரிவித்தார்.
“இந்தக் கட்டமைப்புக்குள்ளே தான் காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. முக்கியமாக 1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருங்கிணைப்பு என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, காஷ்மீரை இந்தியாவுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே முக்கிய நோக்கமாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
“ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றப்பட்டது காஷ்மீரின் அந்தஸ்து மட்டுமல்ல; அது முழு அரசியல் கட்டமைப்பையே மாற்ற முயற்சித்திருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
“உள்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் டெல்லி அரசியல் மையம் எந்தவிதத்திலும் அக்கறைகொள்ளவோ அல்லது கவலைப்படவோ இல்லை. அவர்கள் இல்லாமலேயே தங்களால் செயற்பட முடியும் என்பதை அவர்கள் காண்பித்ததோடு மட்டுமன்றி அவர்களையே அகற்றுவதற்கும் அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
காஷ்மீரின் அரசியல் டெல்லியினால் கடிவாளமிடப்பட்டிருக்கிறது என்ற வானியின் பார்வையையே காஷ்மீரிலுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் கொண்டிருக்கிறார்கள். இதனால் சனநாயக செயன்முறை தொடர்பாக அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. தேர்தல்களின் போது எண்ணிக்கையில் குறைவான வாக்காளர்கள் வாக்களித்ததில் இதன் பிரதிபலிப்பு அமைந்திருந்தது.
கடந்த ஒக்ரோபர் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கென நடத்தப்பட்ட தேர்தலில் நான்கு வீதத்துக்கு சற்று அதிகமானவர்களே வெளியில் வந்து வாக்களித்திருந்தார்கள். இந்திய அரசு சார்பு நிலையைக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் இத்தேர்தலைப் பகிஷ்கரிப்புச் செய்திருந்தன.
நாடாளுமன்றத்துக்காக 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தலில் 8.75 வீதமான மக்களே ஆனந்த்நகர் தொகுதியில் வாக்களித்திருந்தார்கள். 14.8 வீதமானோரும் 35 வீதமானோரும் முறையே சிறீநகரிலும் பாராமுல்லயிலும் வாக்களித்தார்கள்.
ஒப்பீட்டளவில், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஜம்மு பிரதேசத்தில் 70 வீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது.
அரசியல் விவாதத்துக்கும் பொதுமக்களின் பங்களிப்புக்குமான இடைவெளியை மிகக் கடுமையாக வரையறைசெய்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்செலெற் விமர்சித்ததைத் தொடர்ந்து, அடிமட்ட சனநாயத்துக்கு தாம் புத்துயிர் கொடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை இந்தியா தெரிவித்திருக்கிறது.
அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது
இந்திய சார்பு அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பது தொடர்பாக அல்ஜசீரா காஷ்மீரைச் சேர்ந்த பலரோடு உரையாடியது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் மட்டில் காஷ்மீர் மக்கள் பெரியளவில் அநுதாபம் காட்டவில்லை.
“ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக அரசியல்வாதிகளே அதிகமாகக் குரலெழுப்புகிறார்கள். காஷ்மீர் பொதுமக்களைப் பொறுத்த வரையில் எப்போதுமே ஒரே விதமாகத் தான் இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பின் தீவிரத்தன்மை மட்டுமே மாற்றமடைந்திருக்கிறது” என்று டெனிஷ் அஹ்மத் (Denish Ahmad) தெரிவித்தார்.
“இதே அரசியல்வாதிகளே இதுவரை காலமும் எமக்கு அநீதியை இழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த எதிர்காலமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று மேற்படி பிரதேசத்தின் முக்கிய நகரமான சிறீநகரில் வதிகின்ற 25 வயதான மாணவர் ஒருவர் கூறினார்.
“புதிய அரசியல் ஒழுங்கில் தனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை” என்று மத்திய கண்டர்பால் (Ganderbal) மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக்கட்சியின் ஆதரவாளரான 55 வயது நிரம்பிய சிற்றாறா நசீர் (Sitara Nazir) தெரிவித்தார்.
“இவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்ததன் காரணமாக எமது வீடுகளிலேயே நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்து எங்களுக்கு இருந்தது. எமது பிள்ளைகளுக்கு வேலைகள் கிடைக்கும் என்பதோடு ஏதாவதொரு நம்பிக்கையான சூழல் எங்களுக்கு ஏற்படும் என்ற எண்ணத்திலே தான் அப்படிப்பட்ட ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டோம். இன்று எங்கள் நம்பிக்கையை நாங்கள் முற்றாகவே இழந்திருக்கிறோம். இவர்களுக்கு இனி ஒருபோதுமே நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது மேற்கொண்டிருக்கும் கடும் போக்கான கொள்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே காஷ்மீர் விடயம் தொடர்பான நிபுணர்கள் கருதுகிறார்கள்.
“தற்சமயம் நிலைமை இருண்டதாகவே இருக்கிறது” என்று இளைப்பாறிய பேராசிரியரும் 2010-2011 காலப்பகுதிகளில் காஷ்மீர் பிரசைகளுடன் பேச்சு வார்த்தையை மேற்கொள்வதற்கென இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று இடைத்தரகர்களில் ஒருவரான இராதா குமார் (Radha Kumar) தெரிவித்தார்.
“ஒரு முறையான அரசியற் செயற்பாடு இல்லாது ஒரு சனநாயகம் எப்படிச் செயற்படமுடியும்? இறுதியில் அங்கே சனநாயகம் இல்லை என்பது தான் அதன் பொருள். இது மிகவும் அதிர்ச்சியூட்டும் நிலைமை” என்று தொலைபேசி உரையாடலில் அவர் அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.
“இது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. அரசியல் செயற்பாடுகளுக்கான இடைவெளியை மூடுதல் தீவிரவாத செயற்பாடுகளுக்கே வழிவகுக்கும்” என்று அவர் கூறினார். இன்னும் அதிகமான தீவிரவாதத் தன்மைகளுக்கும் தீவிரவாதச் செயற்பாடுகளுக்குமே இது வழிவகுக்கும். அரசு இதுவரை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தப்போகிறது.
அரச சட்டசபையைக் கலைத்த அரசின் செயற்பாட்டை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி நியாயப்படுத்தியிருக்கிறது. “காஷ்மீர் அரசியல்வாதிகளின் கடைகளை இது மூடியிருக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.
“மக்களுக்காக அவர்கள் எதனைச் செய்திருக்கிறார்கள்? தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவே அவர்கள் உழைத்திருக்கிறார்கள்” என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசத்திலுள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுச்செயலரும் பேச்சாளருமான அஷோக் கொஉள் (Ashok Koul) தெரிவித்தார்.
இவை எவ்வாறிருப்பினும் புது டெல்லியினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை, இந்திய அரசுக்குச் சார்பான ஏராளமான அரசியல்வாதிகளை ஒரு குழப்பமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. கிளர்ச்சியாளர்கள் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவர்களுக்கான பாதுகாப்பையும் அரசியலை மேற்கொள்வதற்கான இடைவெளியையும் வழங்குவதாக வாக்களித்திருந்த அரசோ அவர்களைக் கைவிட்டுவிட்டது. பல வகைகளில் ஒரு தீர்க்கப்பட முடியாத புதிருக்குள் இவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள்.
“அவர்கள் (புதுடெல்லி) செய்ததைப் பார்க்கும் போது அரசியலில் ஏதாவது எதிர்காலம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மக்களிடம் போகும் போது அவர்களுக்கு எங்களால் எதனைச் சொல்ல முடியும்? அவர்கள் எங்கள் காலை வாரி விட்டார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டார்கள்” என்று இற்றூ தெரிவித்தார்.
தமிழில் ஜெயந்திரன