யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்கத் திட்டம்; நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

SAMPANTHAN025 யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்கத் திட்டம்; நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட அரச அதிபராக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்துக்குத் தமிழ் பேச முடியாத ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த நியமனத்தை நிறுத்துமாறு கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-

“யாழ். மாவட்டத்துக்கு விரைவில் தமிழ் பேச முடியாத ஒருவர் அரச அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார் என நான் அறிந்து கொண்டேன். நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ்.மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர். மேலும், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்களாவர்.

இந்தப் பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளராக/அரச அதிபராக யாழ். மாவட்டத்துக்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும். மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்துமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க அரசு முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர் மறையான விளைவையும், மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

எனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக/அரச அதிபராக அனுபவமும் செயற் திறனுமுள்ள தமிழ் பேசும் ஓர் அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்” என்றுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021