எங்கள் மீதே விசாரணைகள் தொடர்கின்றன-வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினர் கவலை

எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபர்களையும் நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்யவில்லை, எந்த விசாரணையும் செய்யவில்லை, என்று  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்று விசாரணை ஒன்றுக்கு வருமாறு ஆலயத்தின் பூசாரி மற்றும் அவரது மனைவிக்கு நெடுங்கேணி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

காவல் நிலையம் சென்ற அவர்களிடம் 2019ம் ஆண்டு மலையில் ஏணிப்படி வைத்ததுயார், அதற்கு நிதி வழங்கியது யார் போன்ற விடயங்களை கோரி மூன்று மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை இன்று ஆலய பரிபாலன சபையின் போசகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் அவர்களிடம் யாழில் வைத்து நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புதிதாக வழங்கிய விக்கிரகங்கள் தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.