காலநிலை மாற்றம் தொடர்பிலான இளையோர் ஒன்றிணையும் ‘கிளைமத்தோன்‘ (Climathon) 2021ற்கான சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் மூன்றாவது வருடமாக எதிர்வரும் ஒக்டோபர் 29ம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
இம்முறையும் கொரோனாப் பரவல் காரணமாக முற்று முழுதாக இணையவளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள 150 இற்கும் மேற்பட்ட பெருநகரங்களில் இளையோர்கள் ஒரே காலப்பகுதியில் ஒன்றிணையும் பெருநிகழ்வான கிளைமத்தோன் இடம்பெற்று வருகின்றது.
பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் பங்கேற்பில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளதுடன் இணையவழி நிகழ்வில் பல்வேறு அறிஞர்களும் பேராசிரியர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
மேலும் விபரங்களை அறியவும் இணைந்து செயற்படவும் [email protected] உடன் தொடர்புகொள்ள ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.