இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை நேற்று புதன்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
மேலும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் இராஜாங்க அமைச்சர் மற்றும் இந்திய கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
முன்னதாக இலங்கைக்கான இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்துக் கல்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.