ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா நேற்று திங்கட்கிழமை (10) இரவு இலங்கையை வந்தடைந்தார்.

இந்நிலையிலேயே  இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு அமைச்சில் இன்று சந்தித்தார்.

அதே நேரம்  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை  இன்று சந்தித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகாரச் செயலாளர் வினய் மோகன் குவத்ராவுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

பரஸ்பர நன்மைக்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் , இந்திய  உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினர்  இலங்கை வெளிவிவகார செயலாளரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.