Home Blog Page 55

அரச காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

அரசுக்கு சொந்தமான காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து, தரவுத்தளம் ஒன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காற பாதீட்டு ஒதுக்கீடு மற்றும் 2026ஆம் ஆண்டு பாதீட்டுக்கான திட்டங்கள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை அறிவுத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டு பாதீட்டைத் திட்டமிடும்போது நாட்டை தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதேவேளை உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளை கைத்தொழில்களாக மேம்படுத்த அடுத்த பாதீட்டில் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரி, ஹர்த்தாலுக்கு அழைப்பு

இராணுவத்தினரை கண்டித்து, தமிழரசுக் கட்சி ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்க போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் 63வது படைப்பிரிவைச் சேர்ந்த சில சிப்பாய்களால், முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு, இலங்கைத் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி எழுதியுள்ள கடிதத்தில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – முத்தையன்கட்டு குளத்தில் கடந்த 9ஆம் திகதி 32 வயதான எதிர்மன்சிங்கம் கபில்ராஜ் என்ற பொதுமகன் சடலமாக மீட்கப்பட்டார். அவரும் மேலும் நான்கு பேரும் இராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சில இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடையற்ற விசாரணையை உறுதிசெய்து பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்குமாறும் ஜனாதிபதியை இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் 5 அல்ஜசீரா ஊழியர்கள் உயிரிழப்பு!

Mourners attend the funeral of Palestinian journalist Ahmed Al-Louh

காஸாவின் அல்- ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின் ஒரு ஆயுதப் பிரிவை அல்- ஷரீஃப் வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த அறிக்கையை அல்ஜசீரா நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

2022ம் ஆண்டு காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 270 பத்திரிகையாளர்களும் ஊடக ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் காற்றாலை, கனிய மணல் அகழ்வு: 9ஆம் நாளை எட்டிய போராட்டம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக, மன்னார் பஜார் பகுதியில் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமை, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (11) மன்னார் தீவுப் பகுதியில் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதிலிருந்து, தள்ளாடி மற்றும் மன்னார் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.

வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா  வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் திங்கட்கிழமை (11) குறித்த போராட்டம் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காறர்கள்,

அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்தவேண்டும். இலங்கையின் மீன்பிடி தொழில் மற்றும், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது.

இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு.

ஏற்கனவே உள்ள காற்றாலைகளால் மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள் வடிகாலமைப்பை மாற்றிவெள்ளப்பெருக்கு மற்றும் நிலத்தடி நீர் உவராதலை ஏற்படுத்தியுள்ளது.

காற்றாலைகளின் இரைச்சலால் மன்னாருக்கு வரும் வலசைப்பறவைகளின் வருகையை தடுக்கவும் பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற்படுத்திஉள்ளது.  இது மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட் தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. அதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடக்கின்றன.

எனவே  மன்னாரில் நடைபெற இருக்கின்ற இவ் அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது.

இந்த காற்றாலை மற்றும் கனியஅகழ்வு நாட்டின் தேவைக்கானதன்றிபல் தேசிய கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கானதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றனர்.

வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், அரசியல் தரப்பினர்,சமூக செயற்ப்பாட்டாளர்கள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : மனோ கணேசன்

“நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி  முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.

“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும். “அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே  நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி  வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான நீண்ட பயணம் – விதுரன்

3434 செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான நீண்ட பயணம் - விதுரன்
செம்மணி பகுதியில் ‘தடயவியல் அகழ் வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவி யல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என்று நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமையுடன் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அங்க அகழ்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் 133எலும்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த தனிமன்று, சிசுவொன்றின் எலும்புக்கூடு முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மையானது, உணர்வுபூர்வமாக இருந்ததோடு குழந்தைகளையே படுகொலை செய்து புதைக்கு மளவுக்கு குரூரமான மனோநிலை காணப் பட்டிருக்கின்றது என்ற விடயம் உலகையே உறையச் செய்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, நீல நிற பாடசாலை புத்தகப் பை, பால் சூப்பி உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் இறுதியாக மீட்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூட்டுத்தொகுதியும் இன்னும் எத்தனை அவலங்கள் புதையுண்டு இருக்கின்றன என்ற பெருங்கேள்விகளையும் வெகுவாகவே எழுப்பி யிருக்கின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் ஸ்கான் அறிக்கை மற்றும் மண் பரிசோதனை அறிக்கை என்பவை சமர்ப்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் 1996இல் கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலை ஒரு தனிப்பட்ட குற்றமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தா லும், பின்னர் 1995-96 காலகட்டத்தில் யாழ்ப் பாணத்தில் காணாமலாக்கப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களின் மரணத்துடன் நேரடியாக இணைந்துள்ளமையானது வெளிச்சத்துக்கு வந் திருந்தது. அண்மைய காலத்தில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அந்த விடயத் தினை உறுதிப்படுத்தி வருகின்றன. ஆகவே, செம்மனி மனிதப் படுகொலை என்பது வெறுமனே தனிப்பட்ட படைவீரரின் வன்முறைச் செயல் அல்ல, மாறாக, இலங்கை அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்.குடாநாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட மனித குலத்துக்கு எதிரான மிலேச்சத்தனமா கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட, இன அழிப்பிற் கான அடையாளமாகும்.
அத்துடன், இந்தப் புதைகுழியானது, நீதியை நிலைநாட்டுவதில் உள்நாட்டு அரச கட்டமைப்புக்கள் கொண்டிருந்த அரசியல் விருப்ப மின்மையையும், பொறுப்புக்கூறலின்மை எவ்வாறு ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகின்றது என்பதையும் அம் பலப்படுத்தி நிற்கிறது.
யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற 18 வயது கிருசாந்தி குமாரசுவாமி, தனது இறுதிப் பரீட்சை முடிந்து வீடு திரும்பும் வழியில், செம்மணி சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
கிருசாந்தி வீடு திரும்பாததால், அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், சகோதரர், மற்றும் அயல்வீட்டுக்காரர் ஆகியோரும் செம்மணி சோதனைச் சாவடியில் காணாமலாக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் படுகொலை செய்யப்பட்டு, கிருசாந்தியுடன் அதேயிடத்தில் புதைக்கப்பட்ட னர். இந்த வழக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1998இல் கொழும்பு நீதிமன்றத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்தார்.  அவர், தான் குற்றம் செய்த இடத்தை மட்டுமல்லாமல், 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு களில் யாழ்.குடாநாட்டில் காணாமலாக் கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அரச படைகள் தான் இருக்கின்றன என்பதையும் 300 முதல் 400 உடல்கள் செம்மணியில் புதைக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவரது வாக்குமூலத்தின் விளைவால் 1999 ஜுனில் செம்மணியில் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. இதன்போது மொத்தமாக 15 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இது சோமரத்ன ராஜபக்ஷவின் கூற்றுக்கு மாறாக காணப் பட்டது. அதனால் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, ஏழு இராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அம்னஸ்டி இண்டர்நஷனல் வெளியிட்ட அறிக்கையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டு அவரது மனைவிக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன் அவ்வாறு செய்யாவிட்டால், அவரது குடும்பத்தி னர் கொல்லப்படுவார்கள் என்றும் அச்சுறுத் தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவர் சிறையில் இருந்தபோது தனது வாக்குமூலத்தை மீளப்பெற மறுத்ததால், சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாட்சியத் தின் மீதான இத்தகைய நேரடி அச்சுறுத்தல்கள், 1999ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் போது அதிக உடல்கள்கண்டெடுக்கப்படாததற்கும், விசாரணைகள் திட்டமிட்டுத் தடுக்கப்பட்டதற்கும் காரணமாக இருப்பதோடு மட்டுமன்றி, படு கொலைகளில் அரச படைகளுக்கு பிரதான பங்குண்டு என்பதை யும் வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் தான் அதே சோமரத்ன ராஜபக்ஷ தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எழுதிய கடிதத்தில் ‘சர்வதேச விசாரணை நடைபெற்றால் வாக்குமூலம் அளிப்பதற்கு தயார்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் சிறையில் இருந்துகொண்டு 29 வருடங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் சாட்சியமளிப்பதற்கு தயார் என்று அறிவித்திருப் பதானது அவரது பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளை வெகுவாக வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமன்றி அவர் புலனாய்வு அதி காரிகளின் பெயர் விபரங்களை சுட்டிக்காட்டி யுள்ள நிலையில் அந்த சக்திகள் சோமரத்ன ராஜபக்ஷவின் குரலை சிறைக்குள்யே நசுக்கு வதற்கே முனையும் என்பதும் இயல்பான சந்தேகம். ஆகவே, சோமரத்ன ராஜபக்ஷ பாது காக்கப்பட வேண்டிய குற்றவாளி. ஏனென்றால் அவரின் வாக்குமூலம் தான் குடாநாட்டில் அரங்கேற்ப்பட்ட படுகொலைகளையும், மனித புதைகுழிகளையும் அதனுடன் தொடர்புடைய ஏனைய படை அதிகாரிகளையும் அம்பலப்படுத்தப் போகிறது.
இப்படியிருக்கையில், 1998 ஜுலை 22 அன்று, பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம், செம்மணி புதைகுழிகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘பல உடல்கள் ஒரு இடத்தில் நெருக்கமாக புதைக்கப் படும் போது, தனிப்பட்ட உடல்களைத் தோண்டு வதில் காட்டிலும் தொழில்நுட்ப சிக்கல்கள் அதிகமாக இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந் தார்.
இந்த எச்சரிக்கை நியாயமாக இருந்தாலும் மறுபக்கத்தில் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வெகுவாக பாதிக்கவும் செய்திருந்தது. அதேநேரம், அவர் ஐ.நா.வின் பரிந்துரையின்படி, மூன்று கட்டங்களாக நிபுணத்துவ விசாரணைகள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
நீலன் திருச்செல்வம் 27ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச தரத்திலான விசாரணை முறைகளை விரிவாக விவரித்திருந்தும், அவரது ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டன. அவர் நெருக்கமாகச் செயற்பட்ட சந்திரிகா தலைமையி லான அரசே புறக்கணிப்புக்கும் காரணமாக இருந்தது என்பது வரலாறு. தற்போதும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுகளின்போது தொழில்நுட்பக் கட்டமைப் புகள் இல்லை. அவற்றை உள்வாங்குவதற்கு அரசாங்கத்தின் கட்டமைப்புக்களுக்கு முழு மையான ஈடுபாடுகள் இல்லை. இதனால் தொழில்நுட்ப ரீதியான அணுகுமுறை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மண்ணை ஊடுருவும் ஒரு ஸ்கான் இயந்திரம் பாரிய மனிதப்புதைகுழி அகழ்வுக்கு போதுமானதல்ல.
சர்வதேச நீதிபதிகள் ஆணையகத்தின் அறிக்கையின்படி, இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 60,000 முதல் 100,000 வரை இருக் கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், கடந்தகால நீதி மறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலின்மை குறித்த தீவிரமான நிலை மையை எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கையில் தடயவியல் கட்டமைப்பு களான மரபுரிமை பரிசோதனை வசதிகள், சிதைந்த எச்சங்களைப் பகுப்பாய்வு செய்யவதற்கான ஆய்வகங்கள் முறையாக காணப் படவில்லை. இதனால் சர்வதேச மேற்பார்வையும் ஆய்வுகளுக் கான ஒத்துழைப்பும் பங்கெடுப்பும்  மிகவும் அவசியமானது என்று குறித்த ஆணையகம் வாதிடுவதில் தவறில்லை.
மேலும், ஜுன் மாதத்தில், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டேர்க் செம்மணிப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவரது விஜயம், செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை கிடைத்துள்ளதை உறுதிப்படுத்துவதுடன், பல தசாப்தங்களாகத் தொடரும் பொறுப்புக் கூறலின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற் கான இலங்கை அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற கடைசி வாய்ப்பு என்பதையும் ஆணித்தரமாக கூறுவதாக உள்ளது.
ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமிழர்களின் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் அவரது அரசாங் கத்துக்கு நீதியை நிலைநாட்டுவதில் உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும்,  நிரூ பிப்பதற்குமான முக்கிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது.
செம்மணி புதைகுழி விடயத்தில்  நம்ப கமான, நியாயமான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் ஈடுபாட்டைக் கொண்டிருக்குமாக இருந்தால்  சர்வதேச அனுபவங்களை ஆராய்வது அவசியமாகும்.
1995இல் செர்பிரெனிகா படுகொலைகள் நிகழ்ந்தபோது அங்கு, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் குழு, சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர் களுடன் இணைந்து அகழ்வாராய்ச்சிகளை மேற் கொண்டது. கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் போன்றவை தடயவியல் ஆதாரங்களாக மீட்கப்பட்டன.
அவை அப்படுகொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை நிரூபிக்கவும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் உதவியிருந்தன. அதேபோல், 1990களில் ருவாண்டாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை ஆணையகம் ஆய்வு செய்தபோது, ருவாண்டா அரசாங்கமே பல படுகொலைகளுக்கு நேரடியாகப் பொறுப்பு என்பதை உறுதி செய்ததோடு உள்நாட்டு கட்டமைப்புகள் போர்க் குற்றங்கள் குறித்த வழக்குகளை திறம்பட கையாள முடியாத நிலையில் இருந்தன என்பதையும் கண்டறிந்தது.
போண்மத் நெறிமுறை (Bournemouth Protocol) போன்ற வழிகாட்டுதல்கள், மனிதப் புதைகுழிகளைப் பாதுகாப்பதற்கும், சட்டபூர்வ மான, மனித உரிமைகளை அடியொற்றிய முறை யில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மான வழிகாட்டுதலை வழங்குகிறது. அதுமட்டுமன்றி, படுகொலை செய்யப் பட்டு இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாது காப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங் களிப்பை உறுதி செய்வது, மற்றும் தடயவியல் ஆதாரங்களின் சங்கிலித்தொடர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற அம்சங்களை வலியு றுத்துகிறது.
செர்பிரெனிகா மற்றும் ருவாண்டா போன்ற உலகளாவிய உதாரணங்கள், சர்வ தேசத்தின் பங்கேற்பிற்கான கோரிக்கைகளை உள்நாட்டு அரசக் கட்டமைப்புக்களின் பல வீனத்தின் அடையாளமாக அல்ல, மாறாக நீதிக்கான அத்தியாவசிய தேவையாகவே உறுதிப் படுத்துகின்றன. அந்தவகையில், செம்மணி மனிதப் புதைகுழிகள், பல தசாப்தங்களாக நீதி மறுக்கப் பட்டதன் கவலைக்குரிய அடையாளமாக இருப்பதோடு அண்மைக்காலத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களும், எலும்புக் கூட்டுத் தொகு திகளும்  நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள, முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அவர் களை வழிநடத்துகின்ற சிவில் அமைப்பினர், மற்றும் அரசியல் தரப்பினர் ஏகோபித்த நிலைப் பாட்டுக்கு வரவேண்டும்.
தங்களுக்குள் காணப்படுகின்ற தனிப்பட்ட போட்டிகள், முரண்பாடுகளை மையப்படுத்தி செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தினை கையாள்பவர்கள் நாங்களே என்று மார்பு தட்டி சொந்தக் கொண்டாடுவதற்கு முனையக்கூடாது.
ஏனென்றால் செம்மணி மனிதப்புதைகுழி ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல அது தமிழ் சமூகத்தின் கூட்டு நினைவுக்களம். கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கான வலுவான அடையாளம். அரசபடைகள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரம். ஆகவே, அனைத்து விடயங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலிருந்து முறையாக கையாளப்பட வேண்டும்.
சட்டத்தின் ஊடாக அனைத்தையும் முன்னெடுக்க முடியும் என்ற கோதாவில் செயற்பட முனைவதும், சட்டத்தரணிகள் தான் இந்த விடயத்தினை கையாள வேண்டும் என வரையறுப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அதிலும் குறித்தவொரு சட்டத்தரணிகள் தரப்பு புதைகுழிப் பகுதியை கையாள முனைவது முற்றிலும் தவறானது.  இதுவொரு பல்பங்குதாரர்களைக் கொண்ட விடயமாகும். அந்தப் புரிதல் முதலில் ஏற்பட வேண்டும். அந்த அடிப்படையில் பேதங் களுக்கு அப்பாலான கூட்டுத்திட்டங்களும், செயன் முறைகளும் அவசியமாகும்.
அகழ்வுகள் நடைபெறும் களத்தில் முழு நாளும் முகாமிட்டிருப்பது கட்டாய பணி என்பது போன்று தான் அரச கட்டமைப்புக்களுக்கு கூட்டாக அழுத்தமளிப்பது, தொழில்நுட்ப உதவி களை பெறுவதற்கான அணுகலைச் செய்வது, இராஜதந்திர மட்டங்கள் ஊடாக சர்வதேச அணுகலை செய்வது, சோமரத்ன போன்ற சாட்சிகளை பாதுகாப்பது, ஏனைய பகுதிகளை அடையாளம் காண்பிப்பதற்கான நடவடிக்கை களை முன்னெடுப்பது உள்ளிட்ட பல பணிகள் உள்ளன. அவை முறையான திட்டமிடல்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
நீதியை நிலைநாட்டுவது என்பது ஒரு சில தனிநபர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல, கடந்தகாலத்தின் வடுக்களை சரி செய்வது, பாதிக்கப்பட்டோரின் கண்ணியத்தை மீட்டெடுப்பது, மற்றும் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நிலைமாறுகால நீதியின் கூறுகளை முழுமையாக அமுலாக்குவதாக இருக்க வேண்டும்.

அமெரிக்கா – ரஸ்ய அரச தலைவர்களின் சந்திப்புக்கான இடம் உறுதி செய்யப்பட்டது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்புக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் “பொருத்தமான” இட மாக இருக்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அடுத்த வார தொடக்கத்தில் இரு ஜனாதிபதிகளுக்கும் இடையே நேரடி சந்திப்பு நடை பெறலாம் என்று கிரெம்லின் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள் ளது.
மாஸ்கோவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ் யானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் களிடம்  புடின் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ட்ரம்புடன் உச்சிமாநாட்டிற் கான இடம் குறித்து கேட்டபோது, ரஷ்யாவிற்கு உதவத் தயாராக இருக்கும் “பல நண்பர்கள்” இருப்பதாகவும், ஒரு விருப்பமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை சுட்டிக்காட்டியதாகவும் புடின் குறிப்பிட்டார்.
மேற்கத்திய ஊடக அறிக்கைகளின்படி, விட்காஃப் மாஸ்கோவிற்கு விஜயம் செய்த உடனேயே அமெரிக்க ஜனாதிபதியின் உதவி யாளர்கள் ஒரு சாத்தியமான உச்சிமாநாட்டிற்குத் தம்மை தயார் செய்யத் தொடங்கிவிட்டனர்.
மாநாட்டிற்கான திட்டங்களை யார் தொடங்கினர் என்பது குறித்து கருத்து தெரி வித்த புடின், “இரு தரப்பிலும்” ஆர்வம் காட்டப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உக்ரைனின் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை உள்ளடக்கிய முத்தரப்பு சந்திப்பு என்ற யோசனையை விட்காஃப் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாஸ்கோ இது வரை கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறது.
ஜெலென்ஸ்கியைச் சந்திக்கத் திறந்திருப் பீர்களா என்று நேரடியாகக் கேட்டபோது, புடின் பதிலளித்தார்: “பொதுவாக, எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை. அது சாத்தியம். ஆனால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான உக்ரை னியத் தலைவரின் சட்டப்பூர்வ அதிகாரம் குறித்து மாஸ்கோ பலமுறை கவலை தெரிவித்துள்ளது. ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி பதவிக்காலம் 2024 இல் முடிவுற்றது, ஆனால் அவர் இராணுவச் சட்டத்தை மேற்கோள் காட்டி புதிய தேர்தல்களை நடத்தவில்லை. அதன் பின்னர், மாஸ்கோ அவரை “சட்டவிரோதமான அரசு” என்று முத்திரை குத்தியுள்ளது மற்றும் உக்ரைனில் சட்டப்பூர்வ அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளது.

30 நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

நாட்டிலுள்ள சுமார் 30 நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழு செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்து நீதிபதிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை மாவட்ட நீதிபதி திலின கமகே மற்றும் மொனராகலை மாவட்ட மேலதிக நீதிபதி ரஞ்சனி கமகே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பணி நீக்கப்பட்டுள்ள ஏனைய மூன்று நீதிபதிகளும் அண்மையில் நீதிச் சேவையில் இணைக்கபட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஆனால், அவர் இந்த சேவையில் நியமிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த விடயத்தை தெரிவிக்கவில்லை என்றும் நீதிச் சேவை ஆணைக்குழு செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தற்போது பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் கூறியுள்ளது.

பதவி இழக்கும் இன்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி – அடுத்து சுந்தர் பிச்சையா?

இன்ரெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் சீனாவுடனான உறவுகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை (7) கோரியுள் ளார். நிறுவனம் விற்பனை வீழ்ச் சியை சந்தித்தபோது, அதனை மீட்கும் முயற்சியாக மார்ச் மாதம் டான் அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றி ருந்தார்.
“தலைமை நிர்வாக அதிகாரி மிகவும் சர்ச்சைக்குரியவர், உடனடி யாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த பிரச்சினைக்கு வேறு எந்த தீர்வும் இல்லை” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
குடியரசுக் கட்சி செனட்டர் டாம் காட்டன் புதன்கிழமை, இன்டெல் வாரியத் தலைவர் பிராங்க் யேரிக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, டிரம்பின் கோரிக்கை வந்துள்ளது. அவர், பெய்ஜிங்குடனான டானின் உறவுகள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தார். டானின் நேர்மை மற்றும் சீன நிறுவனங்களில் அவர் முதலீடு செய்ததாகக் கூறப்படும் முதலீடுகளால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்து காட்டன் கேள்வி எழுப்பியுள்ளார் — சில முதலீடுகள் சீன மக்கள் இராணுவத்துடன் தொடர்புடையவை எனவும் கூறப்படுகிறது.
எனினும், டிரம்பின் இந்த கருத்துக்கு இன்டெல் மற்றும் டான் பதிலளிக்கவில்லை. டிரம்பின் பதிவிற்குப் பிறகு, இன்டெல் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5% சரிந்தன, இருப்பினும் பின்னர் அதிகரித்துள்ளன.
வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இரு நாடுகளும் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி துறைகளில் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்தாலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் டிரம்ப் சீன இறக்குமதிகள் மீது கடுமையான வரிகளை விதித்த பின்னர் அதனை கைவிட்டிருந்தார்.
இதனிடையே, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களில் உள்ள வெளிநாட்டவர்களை டிரம்ப் வெளியேற்றி வருவதால், அடுத்ததாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.